நான் சென்று வந்த சிவாலயங்களின் அமைவிடங்கள், செல்லும் வழித்தடங்கள், இறைவனின் திருப்பெயர்கள், தல வரலாறு முதலிய விவரங்கள்- மற்றவருக்கும் பயன்பட வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த வலைப்பதிவு

Tuesday, May 21, 2013

சிவாலய தரிசனத்தின் உண்மைகள்

          சிவா ஆலய தரிசனப் பயணம்



                  நாடும் நகரமும் நற்றிருக் கோயிலும்
                  தேடித் திரிந்து சிவபெரு மானென்று
                  பாடுமின் பாடிப் பணிமின் பணிந்தபின்
                  கூடிய நெஞ்சத்துக் கோயிலாக் கொள்வனே
                                                      -திருமூலர்

கோயில்

. தமிழில்  கோயில்  என்னும்  சொல்  'கோ' + 'இல்'  எனும்
இரண்டு சொற்களின் சேர்க்கையால் உருவானது.
இங்கே 'கோ' என்பது  அரசன் அல்லது இறைவனை
குறிக்கும். கோ' என்பதற்கு `தலைவன்' என்றும் ஒரு
பொருள் இருப்பதால் அனைத்து படைப்புகளுக்கும்
தலைவனாக விளங்கும் இறைவனின் இல்லத்தை
கோவில் என்றே அழைக்க ஆரம்பித்தார்கள்.
கோவிலுக்கு `கோட்டம்', `அம்பலம்' என்ற பெயர்களும்
உண்டு.
 'இல்' என்பது இல்லம் அல்லது வீடு  என்பதை குறிக்கும்.
எனவே 'கோயில்' இறைவன் வாழுமிடம் என்னும் பொருளை 
தருகிறது. கோயில் என்பதற்கு ஆலயம் என்றொரு பெயரும்
உண்டு

ஆலயம்: `' என்றால்  ஆன்மா. `லயம்' என்றால்
வயப்படுதல் அல்லது  ஒன்றுபடுதல். ஜீவாத்மாவாகிய
மனிதர்களை, பரமாத்மாவாகிய, இறைவனுடன்  ஐக்கியப்
படுத்துவதற்கு ஏற்ற இடம் என்பதால் `ஆலயம்' என்கிற
பெயர் வந்தது.
ஆலயம் என்னும் சொல் ஆன்மாக்கள் இறைவனை ஒரு
மனதுடன் வணங்குவதற்கான இடம் என்ற பொருள்  கொண்டது


            புராதனக் கோயில்களின் பெருமைகள்

பண்டைய காலத்தில் இறைவனின் மேன்மைகளை
உணரச் செய்யவும்பெருமைகளை பறை சாற்றவும்
ஆன்மீகத்தை மக்களிடையே வளரச் செய்யவும்
மத, சமய ஒற்றுமையை ஓங்கச் செய்யவும்,
கோவில்களை எழுப்பினார்கள்.
அதனால் பக்தி வளர்ந்தது. மக்கள் பாவத்திற்கு
பயந்தார்கள். ஞானிகளையும், சித்தர்களையும்
ஏன் அடியார்களை கூட இறைவனின் தூதுவர்களாக
எண்ணி வழிபட்டு வாழ்ந்தார்கள்.
இறைவனின் அளவிற்கரிய ஆற்றலை கண்டு
உணரப் பெற்றது நமது பாரத நாடு.
இறைவனே நேரில் வந்து பல அற்புதங்களை
நிகழ்த்திக் காட்டிய அற்புதங்கள் கொண்டது
நமது நாட்டில் உள்ள பல திருத்தலங்கள்..
புராண, வரலாற்று சிறப்பு மிக்க பல கோயில்கள்
அண்டைய நாட்டு பேராசைக்காரர்களின் படையெடுப்பால்
அழிந்து போனாலும், இன்னும் பல கோயில்கள்
இறைவனின் பெருமைகளை பறை சாற்றிக்
கொண்டிருக்கின்றன.



அப்படிபட்ட புராதன கோயில்களை காப்பாற்றி
போற்ற வேண்டியது நமது கடமை அல்லவா ?
இப்பொழுது  அக்கோயில்களை  நாம் காக்க
வில்லையென்றால், அடுத்த சந்ததியினருக்கு
அக்கோவில்களின் பெருமைகளைப் பற்றியும்
இறைவனின் திருவிளையாடல் பற்றியும்
தெரியாமலேயே போய் விடும்.
பல கோயில்களைப் பற்றிய விபரங்கள்,
தெரியாமல் போவதற்கு அதற்குண்டான
பாதை, ஊர், பயண விபரங்கள் சரியாக
இல்லாமையே காரணம்.
பொதுமக்களும் தேடித் திரிந்து, தெரிந்து கொண்டு
செல்ல முயற்சி செய்யாமல், தெரிந்தவரை மட்டும்
சென்று தரிசித்தது போதும் என்று முடித்து
கொள்கிறார்கள். அறிந்து கொள்ளாமல் இருப்பது,
தெரிந்து கொள்ளாமலேயே விடப்படுகிறது.
இதனால் புராதான கோயில்கள் பலப்பல-
கவனிப்பாரற்றும், பூஜை நடத்தப் படாமலும்
பாழடைந்து கொண்டிருக்கிறது. இன்னும் பல
கோயில்கள் ஒரு வேளை பூஜைக்கூட பக்தர்களின்
வரவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.
நம் முன்னோர்கள்- நமக்காக உருவாக்கி விட்டுச்சென்ற
உண்மைகளை, சக்திகளை, நாம் அழிய விடலாமா ?

இறைவனின் அருமை பெருமைகளை நாம் மறந்து
போகலாமா ? இதற்கு என்ன வழி ? அடியார்கள், புராதனக்
கோயில்களை காக்க வேண்டும் என்றால்-
அவற்றை தேடி தேடிச் சென்று தரிசிக்க வேண்டும்.
அப்படி தேடிச் சென்று தரிசிப்பதினால் பக்தர்களுக்கு
ஆன்மீக பலம் கூடும், அத்திருத்தலத்தின் பெருமைகள்
பற்றியும் பலரும் அறிய வாய்ப்புகள் உண்டாகும்.
கோயிலினுள் ஏற்படுகின்ற சக்தியானது, பக்தர்களின்
மனங்களிலும் ஒளி வீசும். வாழ்க்கையில் மேன்மையடைவர்.

பெருக்காறு சடைக்கணிந்த  பெருமான் சேரும்
   பெருங்கோயில் எழுபதினோ டெட்டும் மற்றுங்,
கரக்கோயில் கடி பொழில் சூழ்ஞாழற் கோயில்
   கருப்பறியல் பொருப்பனைய கொகுடிக் கோயில்,
இருக்கோதி மறையவர்கள் வழிபட்டேத்தும்
   இளங்கோயில் மணிக்கோயில் ஆலக்கோயில்,
திருக்கோயில் சிவனுறையுங்கோயில் சூழ்ந்து
   தாழ்ந்திறைஞ்சத் தீவினைகள் தீரும் அன்றே.

என்று திருநாவுக்கரசர் சுவாமிகள் கூறுவார்..  .

வரலாற்று சிறப்பு மிக்க பிரம்மாண்டமான பல கோயில்களை
பற்றிய பாதை மற்றும் இதர விபரங்கள் அறியாததாலும்,
பகுதி சார்ந்த கோயில்களே தரிசிக்க வசதியானவை என்ற
எண்ணம் நம் தமிழக பக்தர்களிடம் மேலோங்கி உள்ளது.
நம் பாரத திருநாட்டின்கன் அமைந்த பல புராதண
கோயில்களை நாம் தரிசிக்க இயலாமல் இருக்கிறோம்.
பொருள் வசதி இருந்தால் மட்டுமே இக்கோயில்களை சென்று
தரிசிக்க முடியும் என்ற சிந்தனை இல்லாமல், இறைவனின்
பெருங்கருணையின் மேல் திட நம்பிக்கையும், பக்தியும்
கொண்டால் ஏதாவது ஒர் அற்புத செயல் மூலம், தரிசனம்
செய்வித்து காண்பிப்பார்
நால்வர் பெருமக்களும் , சித்தர்களும், முனிவர்களும்,
யோகிகளும், ஞானிகளும் கால் நடையாக பல ஸ்தலங்களுக்கு
சென்று இறைவனை தரிசித்து அவன் புகழ் பாடி வந்துள்ளனர்.
     இந்தியாவில் இமயமலை வரை மட்டும் அல்லாமல்
கடல் கடந்து இலங்கை, மலேசியா, தாய்லாந்து, இந்தோனசியா
கம்போடியா என பல வெளிநாட்டிற்கும் சென்று சிவபெருமானின்
தரிசனம் கண்டு வந்துள்ளனர்.

12 ஆம்  நூற்றாண்டில்  கட்டப்பட்ட   கம்போடியாவில்  உள்ள 
’அங்கூர் வாட்’  என்ற இந்துக் கோயிலே உலகின்  மிகப்பெரிய
இந்துக் கோயிலாகும்.
புராதாணக் கோயில்களை அடியார்கள் தரிசிக்க தரிசிக்க தான்
ஸ்தலத்தின் சிறப்பு கூடப் பெறும். அடியார்களும் பலன்
அதிகம் பெறுவர். இத்தலங்களை தொடர்ந்து தரிசிப்பதே
மற்ற மதத்தவரிடமிருந்து நம் கோயிலை காப்பதற்கு சமம்.
       புராதாணக் கோயில்களை நாம் காக்கவில்லயென்றால்
அடுத்த தலைமுறையினருக்கு மேன்மை வாய்ந்த இத்திருக்
கோயில்களைப் பற்றிய அற்புதங்கள் தெரியாமற் போய்விடும்.
ஆகவே, உள்ளூரிலுள்ள ஆலயங்களுக்கு மற்றும் சென்று
இறைவனை தரிசித்து முடித்து கொள்ள நினையாமல்-புராதான,
சக்தி வாய்ந்த பல தலங்களுக்கும் சென்று அத்தல
இறைவனின் பெருமைகளை அறிந்து, உணர்ந்து-பறை சாற்றி-
அவனுடைய பூரண அருளை பெறுவோமாக.  

0 comments:

Post a Comment